PUBLISHED ON : மே 18, 2026 12:00 AM

வி.சி.க., தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில், 'சோபா அரசியல்' என்ற விமர்சனத்தை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி முன்வைத்துள்ளார். அ.தி.மு.க., வின் ஒரு அணி தலைவர்களை, முதல்வர் விஜய் சந்திக்க சென்றபோது, சோபா எடுத்து செல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, அவர் பேசி இருக்கிறார். எங்களை பற்றி உதயநிதி பேசவில்லை. நாங்கள் ஏற்கனவே, 'ஆர்டர்' செய்த சோபா தான், எங்கள் அலுவலகத்துக்கு வந்தது. அங்கு முதல்வர் விஜய் வரவில்லை.
டவுட் தனபாலு: உங்க கட்சி அலுவலகத்துக்கு முதல்வர் விஜய் வரலை என்பது உண்மை தான்... ஆனா, விஜய் ஆட்சிக்கு ஆதரவு தரலாமா வேண்டாமான்னு, கட்சி நிர்வாகிகளுடன் நீங்க நீண்ட நெடிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தப்ப, அங்க சோபாக்கள் வந்ததும், அதன்பிறகு விஜய் ஆட்சிக்கு நீங்க ஆதரவு தந்ததும் தான் பல, 'டவுட்'களை கிளப்புது!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: 'எனக்கு பின்னாலும், எத்தனை நுாற்றாண்டுகள் வந்தாலும், மக்களுக்காக அ.தி.மு.க., இயங்கும்' என, சூளுரைத்த ஜெயலலிதாவின் நம்பிக்கையை மெய்ப்பிக்க, எந்த தியாகத்தையும் செய்ய த யாராக இருக்கிறேன். அ.தி.மு.க., இப்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுபூர்வமாக செயல்பட்டு, மீண்டும் ஆட்சி அமைக்க அரும்பணியாற்றுவோம்.
டவுட் தனபாலு: நீங்க எந்த தியாகமும் செய்ய வேண்டாம்... 'தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைமை பதவியில் இருந்து விலகுகிறேன்... கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூடி, அடுத்த தலைமையை தேர்வு செய்யலாம்'னு அறிவிச்சாலே, இப்ப நடக்கிற எல்லா பிரச்னைகளும் தீர்ந்துடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க, ஒரு குழு அமைக்கிறேன். அக்குழு தொகுதி வாரியாக, அனைத்து தரப்பு நிர்வாகிகளையும் சந்தித்து பேசி, அடுத்த 20 நாட்களில் என்னிடம் அறிக்கை அளிக்கும். தொண்டர்கள் வெளிப்படையாக கருத்து சொல்வதற்காக தனி இணைய தளம் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் செய்த தவறுகள், கட்சி யில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பது பற்றி கருத்து களை கேட்டபின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன்.
டவுட் தனபாலு: இதை எல்லாம் தேர்தலுக்கு முன்னாடியே செஞ்சிருந்தா, ஆளுங்கட்சியாவே நீடிச்சிருப்பீங்க... 'ஆமாம் சாமி' போட்ட அதிகாரிக ள் பேச்சை கேட்டு, '200 தொகுதிகளில் ஜெயிப்போம்'னு வீண் ஜம்பம் பேசியதுதான் உங்க தோல்விக்கு காரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
