காற்று மாசை நீக்கும் விளக்கு
வீட்டுக்கு வெளியே மட்டும் தான் காற்று மாசு இருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் வீட்டுக்குள் இருக்கும் காற்றும் கூட பல்வேறு வகையான துாசுகளால் மாசடைந்து இருக்கிறது.
குறிப்பாக செல்லப் பிராணிகள் உடலில் இருந்து உதிரும் முடி, தோல், கிருமிகள், சிலவிதமான செடிகளின் மகரந்தம் ஆகியவை பல பேருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
இந்த ஒவ்வாமை காலப்போக்கில் ஆஸ்துமாவாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த கொலரடோ பல்கலை ஆய்வாளர்கள் வீட்டுக் குள்ளே இருக்கும் மாசுகளை அகற்றுவதற்கு புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தலாம் என்கின்றனர்.
10 கன மீட்டர் அளவுடைய ஓர் ஆய்வுக் கூடத்தைத் தேர்ந்தெடுத்தனர். அதில் சாதாரணமாக வீட்டுக்குள்ளே இருக்கும் மாசுகளைச் செலுத்தினர்.
இவையெல்லாம் 10 மைக்ரோமீட்டருக்கும் குறைவான அளவு கொண்டவை என்பதால் சாதாரண கண்களால் பார்க்க இயலாது.
பிறகு இந்த அறையில் 222 நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட புற ஊதாக் கதிர்களை வெளியிடும் மின்விளக்கைப் பொருத்தினர்.
254 நானோ மீட்டர் அலை நீளம் கொண்ட புற ஊதாக் கதிர்கள் நம் முடைய கண்களுக்கும் தோலுக்கும் ஆபத்தானவை என்பதால் அதற்கு பதிலாக இதை பயன்படுத்தினர்.
10 நிமிடங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து அறையை மாசுகளைச் சோதித்தனர். 30 நிமிடங்களிலேயே மனிதர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் துாசுகள் 25 % வரை அழிக்கப்பட்டுவிட்டன.
எனவே, இந்த வகை விளக்குகளை வீட்டில், வகுப்பறைகளில், மருத்துவமனைகளில் பயன்படுத்தி காற்று மாசுகளை அழிக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.