PUBLISHED ON : மே 13, 2026 12:00 AM

எம்.ராம்குமார், திருநெல்வேலியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 59 ஆண்டுகளுக்குப் பின், திராவிட கட்சிகள் அல்லாத ஒரு கட்சி, தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்து, தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதேநேரம், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என தெரிந்தவுடன், 20 ஆண்டுகளாக உடன் பயணித்த தி.மு.க.,வை துாக்கி எறிந்துவிட்டு, த.வெ.க.,வுடன் இணைந்துள்ளது காங்கிரஸ்.
கடந்த பார்லிமென்ட் தேர்தலில், 'இண்டி' கூட்டணியில் இடம்பெற்ற எவரும் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காத போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான் ராகுலை பிரதமர் வேட் பாளராக அறிவித்தார்.
அந்த நன்றி சிறிதும் இல்லாமல், இரவோடு இரவாக த.வெ.க.,விற்கு ஆதரவு அளித்ததுள்ளது காங்கிரஸ்.
உண்மையில், தி.மு.க., கூட்டணியை காங்கிரஸ் விரும்பவில்லை என்றால், தேர்தலுக்கு முன்பே இந்த, 'தாவுதலை' வைத்திருக்க வேண்டும்; மாறாக, தி.மு.க.,வுடன் இணைந்து அக்கட்சி ஆதரவுடன் ஐந்து தொகுதிகளை வென்ற பின், லாபத்திற்காக கடையை மாற்றியுள்ளது முகம் சுளிக்க வைக்கிறது.
இதில், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க., கூட்டணியில் இருப்பராம்; ஆனால், விஜய்க்கு ஆதரவு அளிப்பராம். அப்படியெனில், தேர்தல் பிரசாரத்தின் போது, விஜயை பா.ஜ.,வின், 'பி' டீம் என்று சொன்னதும், இப்போது தி.மு.க.,வின், 'பி' டீம் போல், கூட்டணி கட்சியினர் அனைவரும் ஆதரவு தெரிவிப்பது எப்படி?
பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத இந்த அரசியல் வேடதாரிகளின் போலி முகமூடி, விஜயின் அரசியல் வருகையால் கிழிந்து விட்டது! lll
பதவியே முக்கியம்! அபிராமி அருண், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: இத்தனை காலம் தி.மு.க., வின் தயவில்வளர்ந்துவிட்டு,
இப்போது திடீரென்று, 'தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி த.வெ.க.,-வை
ஆதரிக்கிறோம்' என்கிறார், காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார்.
'பதவி ஆசைக்காக இந்த முடிவை எடுக்கவில்லை' என்று இவர்கள் கூறுவதில் இருந்தே
தெரிகிறது, அமைச்சர் பதவிக்கான பேரப் பேச்சு வார்த்தை நடந்திருப்பது!
'மதவாத சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டும்' என்ற பழைய பல்லவியையே
பாடிக்கொண்டு, தங்களுக்கு வசதியான நேரத்தில் கூட்டணிக் கதவுகளைத் தட்டுவது,
காங்கிரசாருக்கு கைவந்த கலை.
'முதுகில் குத்திவிட்டதாகக் கூறுவதை மறுக்கிறோம்' என்கிறார், ராஜேஷ்குமார்.
தேர்தல் வரை ஒருவருடன் இருந்துவிட்டு, முடிவுகள் வந்ததும் மற்றொருவர்
பக்கம் சாய்வதற்குப் பெயர், 'முதுகில் குத்துவது' இல்லையென்றால் வேறு என்ன?
உண்மையில், அதிகாரத்தில் பங்கு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது என்பது படிப்பறிவு இல்லாத பாமரர் கூட அறிவர்!
இத்தனை நாட்களாக தி.மு.க.,வுடன் பயணித்தபோது தெரியாத மாநில அமைதி மற்றும்
எதிர்கால நலன், இப்போது த.வெ.க.,-வைப் பார்த்ததும் எப்படித் தெரிந்தது?
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை என்பர்;
ஆனால், காங்., பொறுத்தவரை, 'நிரந்தரப் பதவியும், அதிகாரமும்' மட்டுமே
குறிக்கோள் என்பது, மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது!
lll
ஊழல்வாதிகள் களையெடுக்கப்பட வேண்டும்! செ.செல்வமணி, செங்கல்பட்டு
மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசின் கடன்,
10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, மாநிலம் தள்ளாடிக் கொண்டிருக்கும்
நிலையில், முதல்வராக பதவி ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு,
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பெரும் சவாலாக இருக்கும் என்று
கூறுகின்றனர்.
ஆனால், இதை மிக எளிதாகவே விஜய் சமாளித்து விடலாம்.
எப்படியெனில், கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலம் முதல் தற்போது வரை
பதவிகளில் கோலாச்சிய அரசியல்வாதிகளின் சொத்து விபரத்தை சரிபார்த்து,
முறைகேடாக சம்பாதித்த அனைத்து சொத்துகளையும், ஓர் அரசாணை வாயிலாக அரசு
கஜானாவில் சேர்த்தால் போதும்; வரும் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமல்ல; அடுத்து
வரும் 10 ஆண்டுகளுக்கான மக்கள் நல திட்டங்களையும் செயல்படுத்தி விடலாம்.
அதேபோல், அரசு அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்களின் சொத்து கணக்குகளை
கவனத்தில் எடுத்துக் கொண்டாலே போதும்; தமிழகத்தின் மொத்த கடனையும் அடைத்து
விடலாம்.
தினந்தோறும் ஐந்து அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகம் என
சோதனையை தொடர்ந்தால், அதிகாரிகள் லஞ்சம் வாங்க பயப்படுவர்; அரசு பணியில்
நேர்மையாக வேலை செய்வோர், மன உளைச்சல் இல்லாமல் பணி செய்வர்.
இதை
ஏன் கூறுகிறேன் என்றால், அரசு பணியில் நேர்மையாக பணியாற்றியதால், பல்வேறு
பிரச்னைகளை சந்தித்து, அவற்றை தாக்குப்பிடிக்க முடியாமல், வி.ஆர்.எஸ்.,
வாங்கிக் கொண்டு வெளியேறியவன் நான்!
எந்த வழிகளில் எல்லாம் பணம்
பெறலாம் என்ற
தந்திரம் அறிந்தவர்கள் அரசு ஊழியர்கள்.
எனவே, 'பூனைக்கு யார் மணி கட்டுவது' என்று யோசிப்பதை விட, ஊழல் பெருச்சாளிகளின் கரங்களுக்குமுதல்வர் துணிந்து மணி கட்ட வேண்டும்!
lll
மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுங்கள்! பி.பாலாஜிகணேஷ், சிதம்பரத்தில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஓட்டுக்கு பணம் கொடுத்தால்,
எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பை,
இந்த தேர்தல் முறியடித்துள்ளது.
பிரசாரங்களுக்கு அதிகம்
செல்லவில்லை; வேட்பாளர்கள் எவர் என்றே தெரியாது; ஆனாலும், 10௮ தொகுதிகளில்,
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றால், இரு
திராவிட கட்சிகள் மீதும், மக்களுக்கு இருக்கும் வெறுப்பையே இது
காட்டியுள்ளது.
அதிலும், முதல்வராக பதவி வகித்த ஸ்டாலின், தன்
சொந்த தொகுதியில் தோற்றது, ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க., மீது, அந்த
தொகுதி மக்களே எவ்வளவு அதிருப்தியுடன் இருந்துள்ளனர் என்பதை
வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
தி.மு.க.,விற்கு மட்டுமல்ல; அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்கள் சரியான சவுக்கடி கொடுத்துவிட்டனர்.
இனியாவது, இக்கட்சிகள் தேர்தல் அரசியல் செய்யாமல், மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி, அவர்களின் குரலாக ஒலிக்க வேண்டும்.
விஜயை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர்; இவராவது அவர்களின் நம்பிக்கையை சிதறவிடாமல் ஆட்சி நடத்த வேண்டும்!
lll
