image
image

சுற்றுலா தலங்கள்:

 

ஆவூர் : புதுக்கோட்டையில் இருந்து 28 கி.மீ தொலைவில் ஆவூர் உள்ளது. இங்குள்ள சர்ச் 1547ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான இந்த சர்ச் ஜான் வெனடியஸ் பொக்கெட் என்பவரால் கட்டப்பட்டது. இந்த இடத்தில் 1747ம் ஆண்டு கத்தோலிக்க சர்ச் கட்டப்பட்டது.

அரசு அருங்காட்சியகம் : புதுகோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அருங்காட்சியகத்தில் புவியியல், உயிரியல், வரலாறு தொடர்பான அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பபட்டுள்ளது. இங்கு அரிய ஐம்பொன் சிலைகளும் உள்ளன.
திறந்திருக்கும் நேரம் : காலை 9 மணி முதல் 5 மணி வரை. அனுமதி இலவசம். வெள்ளி விடுமுறை. தொலைபேசி : 04322-236247.

கட்டுபாவா பள்ளிவாசல் : புதுக்கோட்டையில் இருந்து 30 கி.மீ தொலைவில் கட்டுபாவா பள்ளிவாசல் உள்ளது. திருமயம் மதுரை நெடுஞ்சாலையில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்துக்களும் இந்த பள்ளிவாசலுக்கு சென்று வழிபாடு நடத்துகின்றனர்.

குமாரமலை : புதுக்கோட்டையில் இருந்து 10 கி.மீ தொலைவில் குமாரமலை உள்ளது. மலை உச்சியில் முருகன் கோயில் உள்ளது. கோயிலின் அருகே புனித குளம் உள்ளது.

நர்த்தமலை : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலை முத்தரையர்களின் தலைமை இடமாக விளங்கியது. இங்குள் கற்கோயில் முத்தரையர்களால் கட்டப்பட்டதாகும். விஜயாலய சோழீஸ்வரம் குகைக்கோயில் விஜயாலய சோழனால் கட்டப்பட்டது. கதம்பர்மலை கோயிலும் பார்க்க தகுந்ததாகும். இந்த மøலு புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது.

சித்தன்ன வாசல் : ஓவியக்கலைகளுக்கும், குகைக்கோயில்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது சித்தன்னவாசல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி சமணமதத்தின் மையமாக திகழ்ந்துள்ளது.
சித்தன்னவாசலின் மையப்பகுதியில் அமைந்துள்ள குகைப்பகுதி, "ஏழடிப்பட்டம்' என்று அழைக்கப்படுகிறது. மேற்கு முகப்பில் அறிவர் கோயில் என்னும் சமணர் கோயிலும், அருகில் பாறையில் வடிவமைக்கப்பட்ட சமணர் படுக்கையும் உள்ளது. முன்மண்டபத்தின் விதானத்தில் அமைந்துள்ள தாமரைத் தடாகமும் அதில் மலர்ந்துள்ள தாமரை மலர்களை கந்தர்வன் கொய்வது போன்ற காட்சியும், ஓவியக்கலை அறிந்தோரின் நெஞ்சை நிமிர வைக்கும்.
புதுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ., தொலைவில் இலுப்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்: காலை 7 - மாலை 5.30 மணி.
தங்கும் வசதி: மேற்கண்ட இடங்களுக்கு செல்ல விரும்புவோர் புதுக்கோட்டையில் ரூ.200 - ரூ.600 வரை வாடகை உள்ள லாட்ஜ்களில் தங்கலாம்.

ஆவுடையார்கோயில்: புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழர்களின் சிற்பகலைக்கு எடுத்துக் காட்டாக ஆவுடையார்கோயில்உள்ளது. இங்குள்ள மூலவர் ஆத்மநாத சுவாமி என அழைக்கப்படுகிறார். மாணிக்க வாசகர் உற்சவ மூர்த்தியாக உள்ளார். நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல் புராணம் இக்கோயிலுடன் தொடர்புடையதாகும்.
கோயில் தாழ்வாரங்கள் கொடுங்கை என்னும் கல்லினால் உருவாக்கப்பட்ட கலையெழில் மிக்க சிற்பங்களை உள்ளடக்கியது. இங்குள்ள ராஜகோபுரம் 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. சிவபுராண காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
புதுக்கோட்டையிலிருந்து 46 கிலோமீட்டர் தூரத்தில் ஆவுடையார்கோயில் உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 5.30 - பகல் 1 மணி, மாலை 4.30 - இரவு 8.30 மணி. தொலைபேசி - 04371 - 23330.

 

கொடும்பாளூர்: கட்டிடக்கலைகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள சிற்பங்களைக் கொண்ட மூவர் கோயில் உள்ளது. சிற்பக்கலையில் ஆர்வமுள்ளவர்கள் இங்கு சென்று வரலாம். புதுக்கோட்டையிலிருந்து மணப்பாறை செல்லும் சாலையில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் கொடும்பாளூர் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து இவ்வூர்களுக்கு பஸ், கார், வேன் வசதி உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 6.30 - மாலை 6.30 மணி.

திருக்கோகர்ணம்: திருக்கோகர்ணம் அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் குகைக்கோயில் சிற்பக்கலையில் ஆர்வமுள்ளவர்களை பெரிதும் கவரும் கோயில். புதுக்கோட்டை நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மூலவர் சிவபெருமான் திருக்கோகர் ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். திருக்கோகர்ணேஸ்வரர் குடிகொண்டுள்ளதால் அப்பகுதி திருக்கோகர்ணம் என்று அழைக்கப்படுகிறது. பாறையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் தமிழ்நாட்டில் உள்ள குகைக்கோயில்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இங்கு ராமாயண காட்சிகள் அடங்கிய ஓவியம் ஓவியக்கலைகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி மெயின் ரோட்டில் இரண்டு கி.மீ., தொலைவில் உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 6.30 - பகல் 1 மணி, மாலை 4.30 - இரவு 8.30 மணி.

குடுமியான்மலை: சிற்பக்கலைகளுக்கு எடுத்துக்காட்டாக குடுமியான்மலை அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் மூலவர் சிகாநாதசாமி என்றும், அம்மன் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். மலையின் உச்சியில் முருகப் பெருமான் குடிகொண்டுள்ளார். கிழக்குப்பகுதியில் இந்தியாவின் வேறு எந்த இடத்திலும் இல்லாத, கர்நாடக சங்கீத ஸ்வரம் குறித்த கல்வெட்டுகளும், மேற்கு பகுதியில் 63 நாயன்மார்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. உள்மண்டபத்தில் உள்ள கல்தூண்களில் கலையழகுமிக்க சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் குடுமியான்மலை உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து கார், வேனில் செல்லலாம்.
திறக்கும் நேரம்: காலை 7 - மாலை 4 மணி.

திருமயம்: புதுக்கோட்டையில் இருந்து 19 கி.மீ தொலைவில் திருமயம் உளளது. இங்குள்ள கோட்டையில் சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் உள்ளன. இங்குள்ள கோட்டை தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியில் முக்கிய பங்கு வகித்தது. கி.பி. 1687ம் ஆண்டு 40 ஏக்கர் பரப்பளவில் சேதுபதி விஜயரகுநாத தேவரால் கட்டப்பட்டது. மலையின் மீது சிவன் கோயில் மற்றும் கல்வெட்டுகளை அவர் அமைத்தார். மலையின் அடிவாரத்தில் சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளன. இதில் விஷ்ணு கோயில் இயற்கையாக அமைந்ததாகும்.

வேந்தன்பட்டி : புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ தொலைவில் பொன்னமராவதி செல்லும் வழியில் இந்த டடம் உள்ளது. இங்குள் மீனாட்சி சொக்கேஸ்வரர் கோயிலில் உள்ள நெய் நந்தி அனைவராலும் அறியப்பட்டதாகும். இந்த நந்திக்கு சுத்தமான நெய்யால் அபிஷேகம் நடத்தப்படுகிறது.

விராலிமலை : புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 30 கி.மீ தொலைவிலும் இந்த மலை அமைந்துள்ளது. மலை மீது 15ம் நூற்றாண்டை சேர்ந்த சுப்ரமணியர் கோயில் உள்ளது. இங்கு மயில்கள் சரணாலயம் ஒன்றும் உள்ளது. இந்த கோயிலில் உள்ள மூலவர் மயிலில் அமர்ந்திருப்பது போல உள்ளது.

 

 

image
image
image