image
image

சுற்றுலா தலங்கள்:

 

கொடை ஏரி : கொடைக்கானலில் 24 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஏரியில் படகு சவாரி செய்யலாம். இந்த ஏரி 1863ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் மதுரை கலெக்டராக இருந்த சர் வேரி ஹென்றி லெவின்ஜ் என்பவரால் உருவாக்கப்பட்டதாகும். தொலைபேசி : 04542 - 242045.

பில்லர் ராக் : மூன்று பெரிய கற்பாறைகள் செங்குத்தாக அமைந்த இடமே பில்லர் ராக் ஆகும். இதன் உயரம் 122மீ ஆகும். ஏரியில் இருந்து 7.4 கி.மீ தொலைவில் பில்லர் ராக் அமைந்துள்ளது.

பிரையன்ட் பூங்கா : பிரையன்ட் பூங்காவில் அனைத்து வகையான பூக்களையும், செடிகளையும் பார்த்து பரவசப்படலாம். ஏரியின் கிழக்கு பக்கம் இந்த பூங்கா அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடக்கும் கோடை விழாவில் மலர் கண்காட்சி நடத்தப்படும்.

சோலார்பிசிக்கல் அப்சர்வேட்டரி : ஏரியிலிருந்து 32 கி.மீ.,தொலைவில் சோலார்பிசிக்கல் அப்சர்வேட்டரி உள்ளது. சோலார் பிசிக்கல் அப்சர்வேட்டரி கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரத்து 343 மீட்டர் உயரத்தில் உள்ளது. கொடைக் கானல் மலையில் இதுவே அதிகபட்ச உயரமாக கருதப்படுகிறது. வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களை பார்ப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கோக்கர்ஸ் வாக் : மலையின் ஓரமாக இயற்கை எழிலை ரசிப்பதற்கு ஏற்ப அமைக்கப்பட்ட பாதையே கோக்கர்ஸ் வாக் ஆகும். கோக்கர் என்ற பொறியாளர் 1872ம் ஆண்டு இந்த பாதையை கண்டறிந்தார். தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்ட இந்த பாதையில் நடந்து செல்வது மனதிற்கு மிகவும் அமைதியை தரும்.

பியர் சோலா அருவி : பஸ் நிலையத்தில் இருந்து 1.6 கி.மீ தொலைவில் பியர் சோலா அருவி உள்ளது. கரடிகள் இங்கு நீர் அருந்த வந்ததால் இந்த பெயர் ஏற்பட்டதாக கூறுவதுண்டு.

பேரிஜம் லேக் வியூ : கொடை ஏரியில் இருந்து 19 கி.மீ தொலைவில் பேரிஜம் லேக் உள்ளது.

செட்டியார் பூங்கா : கொடைக்கானலின் வடகிழக்கு மூலையில் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு செல்லும் வழியில் இந்த பூங்கா அமைந்துள்ளது.

பெய்ரி பால்ஸ் : கொடைக்கானல் ஏரியில் இருந்து 5 கி.மீ தொலைவில் பெய்ரி பால்ஸ் அமைந்துள்ளது.

பசுமை பள்ளத்தாக்கு : ஏரியில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் பசுமை பள்ளத்தாக்கு உள்ளது. இங்கிருந்து பார்த்தால் வைகை அணை தெரியும். இதன் அருகில் உள்ள மிக ஆழமான மரங்களடர்ந்த பள்ளத்தாக்கை தற்கொலை முனை என அழைக்கிறார்கள்.

குக்கல் குகை : கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ தொலைவில் பூம்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் குக்கல் குகை உள்ளது.

குறிஞ்சி ஆண்டவர் கோயில் : கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன. கடந்த 2004ம் ஆணடு கடைசியாக குறிஞ்சி பூ பூத்தது. கொடை ஏரியில் இருந்து 3 கி.மீ தொலைவில் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உறைந்திருக்கும் முருக பெருமான் குறிஞ்சி ஆண்டவர் என அழைக்கப்படுகிறார். இந்த கோயிலில் இருந்து பார்த்தால் வைகை அணை மற்றும் பழனி மலையை காணலாம்.

கோல்ப் கிளப் : பில்லர் ராக்கிற்கு செல்லும் வழியில் கொடை கோல்ப் கிளப் அமைந்துள்ளது. இந்த கிளப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே விளையாட முடியும். உறுப்பினர்கள் அல்லாதவர்களும், விடுமுறையில் விளையாட வருபவர்களும் சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.

 

செண்பகனூர் மியூசியம் : இந்த மியூசியம் புனித இருதய கல்லூரியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு மனித வள ஆராய்ச்சி பற்றிய நூல்கள் மற்றும் பல்வேறு கற்கால பொருட்கள் உள்ளன. நுழைவுகட்டணம் : ஒரு ரூபாய். திறந்திருக்கும் நேரம் : காலை 10 மணி முதல் 11.30 வரை, மதியம் 3 மணி முதல் 5 மணி வரை.

சைலன்ட் வேலி வியூ(அமைதி பள்ளத்தாக்கு) : பில்லர் ராக்கில் இருந்து சற்று தொலைவில் சைலன்ட் வேலி வியூ உள்ளது.

வெள்ளி அருவி : கொடை ஏரியில் இருந்து 8 கி.மீ தொலைவில் இந்த அருவி உள்ளது. கொடை ஏரி நிரம்பி வழியும் 180 அடியில் இருந்து அருவியாக விழுகிறது. சுற்றுலா பயணிகள் இங்கு குளிக்கவும் செய்கின்றனர்.

பாம்பார் பால்ஸ் : இந்த அருவிக்கு கிராண்ட் அருவி என்ற பெயரும் உண்டு. கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் பாம்பார் ஹவுசின் பின்புறம் அமைந்துள்ளது.
 

 

 

image
image
image