image
image

சுற்றுலா தலங்கள்:

 

திண்டுக்கல் கோட்டை : திண்டுக்கல் மலைக்கோட்டை திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது. 280 அடி உயரத்தில் பாறை மீது கோட்டை கட்டப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரு திண்டு போல காணப்படுகிறது. இதுவே திண்டுக்கல் என்ற பெயர் வர காரணமாக அமைந்தது. 1605ம் ஆண்டு மதுரை நாயக்க மன்னர் முத்து கிருஷ்ண நாயக்கர் இந்த கோட்டையை கட்ட துவங்கினார். 1623ம் ஆண்டுதுவங்கி 1659ம் ஆண்டு வரை நடந்த இப்பணியை மன்னர் திருமலை நாயக்கர் நிறைவேற்றினார். 1755ம் ஆண்டு ஹைதர் அலி கோட்டை பாதுகாப்பாளராக இருந்தார். 1784 முதல் 1790 வரை கோட்டை திப்பு சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது. திப்பு சுல்தான் காலத்தில் கோட்டையை கவனித்து கொண்ட படை தளபதி சயீத் இப்ராகிம் பல புதிய அறைகளை கட்டினார். கோட்டை சுவர்களை பலப்படுத்தி செப்பனிட்டார். 1790ம் ஆண்டு திப்பு சுல்தான் ஆங்கிலேயரிடம் தோற்றதால் கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்தது.

அபிராமி அம்மன் கோயில் : திண்டுக்கல் மாவட்டத்தின் மைய பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் பூப்பல்லாக்கில் ஊர்வலம் வருவார். நவராத்திரி கொலு இங்கு மிகவும் விஷேசமாகும். தொலைபேசி - 0451 - 2433229

பேகம்பூர் பெரிய மசூதி : ஹைதர் அலியின் ஆட்சி காலத்தில், அவர் 3 மசூதிகளை அமைத்தார். ஒன்று அவருக்காகவும், மற்றொன்று மலைகோட்டையின் கீழ் தன்னுடைய படையினருக்காகவும், 3வது பொதுமக்களுக்காக கோட்டையின் தென்பக்கம் பிரமாண்டமாக கட்டினார். ஹைதர் அலியின் சகோதரி அமீர் உன் நிஷா பேகத்தின் உடல் இங்கு புதைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இடத்திற்கு பேகம்பூர் என்ற பெயர் வந்தது. தொலைபேசி - 0451 - 2402086.

நாடு பட்டி ஆஞ்சநேயர் கோயில் : நாடுபட்டி ஆஞ்சநேயர் கோயில் திண்டுக்கல்லில் இருந்து 35 கி.மீ தொலைவில் நிலக்கோட்டையில் அமைந்துள்ளது. இந்த கோயில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளதால் இதன் பிம்பம் நீரில் பிரதிபலிக்கிறது.

பெரிய நாயகி அம்மன் கோயில் : பழனியின் மிக முக்கிய கோயில்களில் பெரியநாயகி அம்மன் கோயிலும் ஒன்றாகும். தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானத்தின் துணை கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோயிலின் கட்டமைப்பு வித்தியாசமாக நாயக்கர்கள் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள சிற்பங்கள் மிகவும் கலைநயம் மிக்கதாகும். முக்கிய மண்டபத்தில் பல உயரமான தூண்கள் உள்ளன. தூண்களில் முருகனின் பல்வேறு வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரம் தவிர பல சிறிய கோபுரங்களும் இங்கு உள்ளன. இந்த கோபுரங்கள் தேவஸ்தானத்தின் மூலம் பிற்காலத்தில் கட்டப்பட்டதாகும்.

பழனி : பழனி மலையின் மீது முருகன் தண்டாயுதபாணியாக வீற்றிருக்கிறார். முருகனின் அறுபடை வீடுகளில் பழனியும் ஒன்றாகும். தென்னிந்தியாவின் முக்கிய புண்ணிய தலங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. தமிழகத்திலேயே மிக அதிக வருமானம் கொண்ட பெருமையுடையது. இங்கே முருகப்பெருமானை வணங்கி அருள் பெறலாம். திருப்பதிக்கு அடுத்தபடியாக முடிகாணிக்கை செலுத்த பக்தர்கள் இங்கு ஏராளமாக வருகின்றனர்.

வழிபாட்டு கட்டணம்
1. சுண்டல் கட்டளை ரூ.500
2. அர்ச்சனைக்கட்டளை ரூ.100
3. பஞ்சாமிர்த கட்டளை ரூ.150
4. தங்கமயில் வாகன புறப்பாடு ரூ.1,000

பஞ்சாமிர்தம்: கோயிலின் விசேஷ பிரசாதமான பஞ்சாமிர்தம் 500 கிராம் எடை கொண்டது ரூ. 25 மற்றும் ரூ. 30. விற்கப்படுகிறது.

மலைக்கோயில் நடை திறப்பு நேரம்: சாதாரண நாட்களில் காலை 6 மணி, திருவிழா நாட்களில் காலை 4 மணி.

விஞ்ச்: பழநி கோயிலில் 3 விஞ்ச்கள் உள்ளன. 10 நிமிடத்தில் தரைத்தளத்தில் இருந்து மலைக்கோயில் சென்றடையும். பெரியவர்களுக்கு ரூ. 10, சிறியவர் களுக்கு ரூ.5, சிறப்பு கட்டணம் மலைக்கோயில் செல்ல ரூ. 50, கோயிலில் இருந்து கீழே வர ரூ. 25.

ரோப்கார்: காலை 7 - 10.30 மணி, 11 - மதியம் 1.30, மதியம் 2.30 - மாலை 5.45, மாலை 6.15 - இரவு
9 மணி.
கட்டணம்: நபர் ஒருவருக்கு ரூ. 15,

சிறப்பு கட்டணம்: ரூ. 50, 3 வயதுக்கு மேல் கட்டணம் உண்டு.
தொலைபேசி - 04545 - 242293.

ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் : கோட்டை மாரியம்மன் கோயில் 300 ஆண்டு பழமையானதாகும். 18ம் நூற்றாண்டில் மாரியம்மன் சிலையை திப்புசுல்தானின் படையில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் மலைக்கோட்டையின் கீழ் நிறுவினார். இதுவே திண்டுக்கல் மக்களுக்கு கோட்டை மாரியம்மனாக, காவல் தெய்வமாக உள்ளது. கோயில் சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தென் புறம் விநாயகர் கோயிலும், வடக்கில் மதுரை வீரன் கோயிலும் உள்ளன. கோயிலின் நடுவே உள்ள மண்டபத்தில் சிங்க முகம் கொண்ட சிலை அம்மனை நோக்கி இருக்குமாறு அமைந்துள்ளது. கோயில் கர்ப்பகிரகத்தில் பல்வேறு சிறிய சிலைகளும் உள்ளன. இவை அனைத்தும் மாரியம்மனின் பல்வேறு அவதாரங்களை பிரதிபலிப்பதாக உள்ளது. கோயில் திண்டுக்கல்லின் மையத்தில் அமைந்துள்ளது.

ஸ்ரீ காளகத்தீஸ்வரர் கோயில் : மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிஞூல திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இங்கு காளகத்தீஸ்வரர் ஞானாம்பிகை அம்மனுடன் வீற்றிருக்கிறார். திண்டுக்கல்லின் மைய பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது.

செயின்ட் ஜான்ஸ் சர்ச் : தாமஸ் பெர்னான்டோ என்பவரால் இந்த சர்ச் கட்டப்பட்டது. இந்த சர்ச்சில் ஜனவரி கடைசி வெள்ளி கிழமை துவங்கி தொடர்ந்து 15 நாட்கள் விழா நடைபெறும். செயின்ட் ஜான்ஸ் சர்ச் 100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்ட்டதாகும். 1866ம் ஆண்டு துவங்கி 1872ம் ஆண்டு இந்த பணி நிறைவடைந்தது. திண்டுக்கல்லின் உள்ள பிற சர்ச்களுக்கு தலைமை இடமாக இந்த சர்ச் திகழ்கிறது.

தாடி கொம்பு பெருமாள் கோயில் : திண்டுக்கல்லில் இருந்து 10 கி.மீ தொலைவில் தாடிகொம்பில் சவுந்திரராஜ பெருமாள் கோயில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் பெருமாள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவார். கோயிலில் உள்ள சிற்பங்கள் நுண்ணிய வேலைப்பாடுகள் மிகுந்தவை ஆகும்.

நத்தம் மாரியம்மன் கோயில் : திண்டுக்கல் மற்றும் மதுரையில் இருந்து 36 கி.மீ தொலைவில் நத்தம் மாரியம்மன் கோயில் உள்ளது.

 

 

image
image
image